Tuesday, January 1, 2019

அடைத்து வைக்கப்பட்ட அடிமைகள்!

-கார்த்தி சிவராமன்-

இலாபத்தை மாத்திரம் நோக்காகக் கொண்டு செயற்படும் கம்பனிகள் பல தொழிலாளர்களின் நலன்குறித்துச் சிந்திப்பதில்லை. இதற்குப் பல கம்பனிகள் சான்று.

அதேபோல் வீரகேசரியும் தற்போது ஊழியர்களை சிறையில் அடைத்தது போல இலாபத்தை மாத்திரம் நோக்காகக் கொண்டு இயங்குகிறது. இதனைத் தட்டிக் கேட்பதற்கு  நாதியற்றவர்களாக, தினமும்  புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள ஊழியர்கள்.

அதாவது, வீரகேசரி தலைமைக் காரியாலயம் தற்போது ஏக்கலையில் இயங்கி வருகிறது. ஏக்கலை என்றால் ஏக்கலை நகர் அல்ல, அங்கிருந்து சில கிலோமீற்றர் தூரம் உள்ளே செல்ல வேண்டும். அந்த வீதியில் செல்வதற்கு பஸ்கள் இல்லை. கால்நடை அல்லது முச்சக்கர வண்டியில் தான் செல்ல வேண்டும்.

ஊழியர்கள் கொழும்பில் இருந்து பஸ்களில் பஸ்களில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மீண்டும் பணி நிறைவின் பின்னர் பஸ்களில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தினமும் பஸ் பயணத்துக்கு மாத்திரம் 4 மணித்தியாலங்கள் செலவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாது அவர்கள் அரைநேர விடுமுறையில் கூட வர முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

வீரகேசரியில் பொதுவாகவே சம்பளம் சொற்ப அளவே வழங்கப்படும். மேலதிக நேர தொழிலில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதன் மூலம் கொஞ்சம் அதிகமாக உழைத்துப் பணம் பெற்ற காலம் உண்டு. ஆனால் ஏக்கலையில் அது முடியாது. குறிப்பிட்ட நேரத்துக்கு அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். இது திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறையாகும்.

மேலதிக நேர வேலைக் கொடுப்பனவாக மாதாந்தம் 18 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா இதுவரை வழங்கப்பட்டு வந்தது. அந்தத் தொகை இப்போது ஆறு இலட்சத்து 81 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கி, அவர்களின் நலனைக் கருத்திற்கொள்ளாத தொழிற்சாலையாகவே வீரகேசரி தற்போது இயங்கி வருகிறது.
வீரகேசரியில் தொழில்புரிந்தால் ஒருவகையான பெருமை என்பதாலும், வேறு தொழிலைத் தேடிக்கொள்வதில் சிக்கல்களாலும் பெரும்பாலானோர் தொடர்ந்தும் தொழில்புரிந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் மன ஆதங்கம் சொல்லில் புரிய வைக்க முடியாது.

எம்.டி. உள்ளிட்ட பல பெரும் தலைகள் ஏசி வாகனத்தில் சாரதியருடன் வலம் வந்து கொண்டிருக்கையில் ஏனைய ஊழியர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள். நீண்ட தூர பயணம் என்பதால் உடல் ரீதியான அசதியுடன் நோய்வாய்ப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது உள ரீதியான பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர்.
குடும்பத்துடன் நேரத்தை கழிக்க முடியாத பெரும் சோகம் அங்கு தொழில்புரியும் எல்லாருக்கும் உண்டு.

ஏன் ஏக்கலையில் அலுகலகம் அமைக்க வேண்டும்?

சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான உற்பத்தி இயந்திரங்கள் தலைநகர் கொழும்புக்கு வெளியில் நிறுவப்பட வேண்டும் என்ற கடப்பாட்டை அரசாங்கம் கொண்டு வந்திருந்தது.
அந்த வகையில் பத்திரிகை அச்சு இயந்திரத்தை மாத்திரம் கொழும்புக்கு வெளியே நிறுவ வேண்டி வந்தது.

அதற்கு, வத்தளை, இராஜகிரிய போன்ற பகுதிகளையும் தெரிவு செய்திருக்கலாம். ஆனால் பெருந்தலைகளுக்கு கொமிஷன் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருந்ததால் சுய நலனுக்காகவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆசியாவின் இரண்டாவது பெரிய அச்சு இயந்திரம் எங்களுடையது எனச் சொல்லிக்கொள்ளும் முகாமைத்துவம் அதனை இலங்கைக்கு கொண்டு வருவதில் பெரும் தொகையான கொமிஷனைப் பெற்றுக்கொண்டது.

அது மாத்திரமல்லாது ஏக்கலையில் நிலத் தெரிவில் யார், யார் எம்.டி.யை ஏமாற்றி கொமிஷன் அடித்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
உரிய நிலத்தைப் பெற்றுக்கொடுப்பவர்களுக்கு 3 வீத கொமிஷன் வழங்கப்படும் என எம்.டி. அறிவித்திருந்தார். ஆனால் அதனையும் தாண்டி மூவர் அடித்த கொமிஷன் தொகையோ கோடிகளுக்கு வெளியேயான தொகையாகும்.

அது மாத்திரமல்லாது இன்னும் பல தகவல்கள் உண்டு. அவற்றை இனி வரும் காலங்களில் பதிவு செய்வோம்.
ஆனாலும் இப்போது ஊழியர்களை அடிமைத்தனமாக, சிறைக்குள் பூட்டி வைத்து வேலை வாங்கும் இந்த நிறுவனத்துக்கு எதிராக யார் செயற்படுப் போகிறார்கள் என்பதே கேள்விக்குறி.

என்னதான் இருந்தாலும் ஊழியர்களின் சாபம், அனைத்துக் கள்ளப் பூனைகளையும் சும்மா விடாது என்பதே உண்மை. காலம் நிச்சயமாகப் பதில் சொல்லும். காத்திருப்போம்.

No comments:

Post a Comment